அபுதாபியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

அபுதாபி: வளைகுடா நாடான அபுதாபியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய முடிவினை அபுதாபி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அபுதாபி நகரம், மேற்கு அபுதாபி எமிரேட், கிழக்கில் உள்ல அல் அய்ன் ஆகிய பகுதிகளில் பொது இடங்கள், தெருக்களில் எச்சில் துப்பினால் 100 திர்ஹாம் (27.25 டாலர்கள்) அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் ஓமர் அல் ஹாஷ்மி கூறியுள்ளார்.

எச்சில் துப்புவோர் பிடிபட்ட இடத்திலேயே அபராதம் கட்ட வேண்டும். எச்சில் துப்புபவர்களைப் பிடிப்பதற்காக ஏராளமான நகராட்சி இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

டாக்சி டிரைவர்கள், மோட்டார் வாகனங்களில் வருவோர் அல்லது மற்றவர்களால் அபராதம் கட்ட முடியாவிட்டால், அவர்கள் வைத்திருக்கும் வாகனங்கள், ஓட்டுநர் உரிமங்கள் அல்லது ஒர்க் பெர்மிட் போன்றவை பறிமுதல் செய்யப்படும்.

அபராதத்தைக் கட்டிய பின்னர் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.