ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி! இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.57 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள செளதி அரேபிய அரசு அனுமதித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஹஜ் துறை அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமதும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அகமத் பேசுகையில், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,57,000 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சௌதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கூடுதலாக 15,000 யாத்ரீகர்களை அனுமதிக்குமாறு கோரியுள்ளோம். அதற்கும் அனேகமாக ஒப்புதல் கிடைத்துவிடும்.1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்ரீகர்களும் மீதி இடங்கள் தனியார் முகவர்கள் மூலம் வருபவர்களுக்கும் ஒதுக்கப்படும்.மெக்காவின் புனிதப் பள்ளி விரிவாக்கப் பணிகள் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்ரீகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.யாத்ரீகர்களுக்கான இருப்பிடங்கள் இந்த ஆண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புனிதப் பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' பகுதி என்றும், 1 முதல் 6 கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.இதில் பச்சை வகைப் பகுதிக்கு யாத்ரீகர்களிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளை வகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸா அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் பகுதி எல்லைக்குள்ளேயே இருக்கும்.கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகளை முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.இந்த சந்திப்பின்போது சௌதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், துணைத் தூதர் டாக்டர். அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.