இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்

Apple - iPhone
டெல்லி: இந்தியாவில் ஐஃபோன்களை விற்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.

வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.

இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.