10 ஆண்டுக்கு மேல் காரை ஓட்ட துபாயில் தடை!

துபாய்: துபாயில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் மாசு, அதனால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு காரின் உழைக்கும் வயதை 10 ஆண்டாக நிர்ணயித்துள்ளது துபாய் நகராட்சி.

துபாயில் தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசின் அளவு 13 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் கார்களால் ஏற்படும் மாசு இது. மேலும் டீசல் கார்களால் ஏற்படும் புகை மாசின் அளவு 19 சதவீதமாகும்.

இந்த புகை மாசு காரணமாக துபாயில் வெப்ப நிலை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து துபாய் சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான கார்களைத் தடை செய்ய நகராட்சிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்ற நகராட்சி நிர்வாகம், ஒரு வாகனத்தை 10 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது